திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 8 வார்டு வரை பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை ஏற்று முகாமை துவக்கி வைத்து பேசினார். முசிறி கோட்டாட்சியர் (பொறுப்பு) உதயகுமார், தொட்டியம் தாசில்தார் சேக்கிழார், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விரிவாக பேசினர். முகாமில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை,
வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை, கூட்டுறவு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் முகாமில் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். முகாமில் பயனாளிகளுக்கு பட்டா, பட்டா நகல், மருத்துவ உபகரணம்,
கர்ப்பிணி பெண்களுக்கு சஞ்சீவி பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் சங்கீதா, துணைத் தலைவர் சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.