சிதம்பரம் அருகே உள்ள சாலியந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகணபதி(22 ) இளைஞரான இவர் சிதம்பரம் அருகே உள்ள மூங்கிலடி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றின் கரையோரம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முகம், தலை உள்ளிட்ட இடங்களில் பாலகணபதிக்கு வெட்டுக்காயம் இருந்தது. விசாரணையில், முன்பகை காரணமாக சிலர் பாலகணபதியை ஆற்றின் கரையோரம் வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சந்தேகப்படும்படியான சில நபர்களிடம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பாலகணபதி முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.