திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள வீரபாண்டியபட்டணம் கடற்கரையில் இன்று நடைபயணம் மேற்கொண்டவர்கள் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியிருப்பதை கண்டனர். இதை சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்தனர்.
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை சுமார் இரண்டரை அடி நீளமும் 25 கிலோ எடையும் இருக்கும் என்று தெரிகிறது. இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இந்த ஆலிவ் ரெட்லி வகை ஆமை இனத்தைச் சேர்ந்தது. திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனமாகும் இந்த வகை ஆமை.
தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த ஆமையானது முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிப்பட்டோ அல்லது பாறைகளில் வேகமாக மோதியதால் முகத்தில் காயங்கள் ஏற்பட்டோ இறந்திருக்கலாம் அல்லது ஏதாவது மீன்பிடி படகுகளில் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது.
இதற்கிடையே திருச்செந்தூர் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் இறந்த நிலையில் கிடந்த கடல் ஆமையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2 மாதங்களில் மட்டும் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் 5 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது. இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் அருகே கடற்கரை பகுதியில் 25 கிலோ எடைகொண்ட ஒன்றரை அடி நீளமுடைய கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது போன்று சமீப நாட்களாக கடல் வாழ் உயிரினங்களான டால்பின், ஆமை உள்ளவைகள் தொடர்ந்து அடுத்தடுத்து இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவது திருச்செந்தூர் பொதுமக்களிடையே பேரதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.