
கோவை மாநகரை கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலம் தொடங்க இன்னும் பல வாரங்கள் உள்ள நிலையில், கோவையில் தற்போதே 95 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் கோவையில் வறண்ட வானிலை நிலவுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த தாக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி உள்ளிட்டவற்றை அதிகமாக சாப்பிடுகின்றனர். மேலும் ஜூஸ் வகைகள், பதனீர் உள்ளிட்டவற்றை வாங்கி குடிக்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து கோவையில் மண்பானை விற்பனை சூடுபிடித்து உள்ளது. ஒரு மண்பானை ரூ.250 முதல் ரூ.850 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களில் மண்பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு தண்ணீர் கேனை நேரடியாக கவிழ்த்தி வைத்து பயன்படுத்தும் வகையிலான ஜாடி மண்பானைகள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவை சந்தையில் இருந்தாலும், இந்த ஆண்டு இவ்வகை மண் பானைகளை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல மண்ணால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில் மற்றும் சிறியது முதல் பெரிய வகையான மண்பானைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.