மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் திருப்பரங்குன்றத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் யாரும் மாவட்டத்திற்குள் வராத வகையில் கூடுதல் பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருப்பூர் மாநகரில் இருந்து வெளியேறும் கார் வேன் மற்றும் பேருந்துகளில் செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களது ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றது. போராட்டத்திற்கு பங்கேற்க செல்வதாக கருதப்படுபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து இன்று முருக பக்தர்களுடன் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் திருப்பரங்குன்றம் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் காலை முதல் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் அலுவலகம் அமைந்துள்ள பெரிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் செல்வதற்காக கையில் வேலுடன் அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் இறங்கி வந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் திடீரென தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தின் போது கைது செய்யக்கூடாது என வலியுறுத்தி இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி அழைத்துச் சென்றனர். தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட வரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.