சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தேவரம்பூர் கிராம பொதுமக்கள் மற்றும் காட்டாம்பூர் இளைஞர்கள் இணைந்து மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 2ஆம் ஆண்டு இரட்டைமாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடத்தினர்.

திருப்பத்தூர்- சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 19 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 32 ஜோடிகள் என மொத்தம் 51 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 32 வண்டிகள் கலந்துகொண்டதால் 16 மற்றும் 16 என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடுகளுக்கான எல்கையாக 7 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 5 மைல் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர்.

விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டியினை சாலையின் இருபுறங்களில் நின்று திரளான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர்.