கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


காளையார்கோவில் அருகே பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இ்ந்த ஆண்டிற்கான விழா கடந்த 9-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் காலை அம்மன் கேடக வாகத்திலும் இரவு கிளி, அன்னம், சிம்மம், தங்க ரதத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

9-ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் காளிஅம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.


அதன் பின்னர் காலை 9.15 மணிக்கு தேரில் எழுந்தருளிய அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு கொடி அசைக்கப்பட்டதும் அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். அதற்கு முன்பு சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி அம்பாள் தேருக்கு முன்பு கோவிலை சுற்றி வலம் வந்தது.

அதற்கு பின்னால் அம்பாள் தேர் கோவிலின் 4 ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து காலை10.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேர் நிலையை வந்தடைந்ததும் அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் பூக்களை தூவியும் கைத்தட்டியும், வணங்கினர். அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.