விசிக நிர்வாகி தன்னை தாக்கியதாக புகார் கூறிய போலீஸ் பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் – டிஐஜி அபிநவ்குமார் உத்தரவு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் பிரணிதா. பிப்.5-ம் தேதி இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்த தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி இளையகவுதமன் உள்ளிட்ட சிலர் தாக்கியதாக புகார் தெரிவித்தார்.

மேலும் அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார் இதுகுறித்து காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் சோமநாதபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இதனிடையே, காவல்நிலைய சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதோடு, பணியில் இருந்த போலீஸார், மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தியதில், உதவி ஆய்வாளர் பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது என சிவகங்கை மாவட்ட காவல்துறை விளக்கமளித்தது. இந்நிலையில் உதவி ஆய்வாளர் பிரணிதாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.